வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கவர்ச்சி நடிகை மாயாவின் கார் கண்ணாடி உடைப்பு: சிசிடிவி மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை:  வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சினிமா  கவர்ச்சி நடிகை மாயாவின் கார் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்தவர் மாயா (60), பழம்பெரும்  சினிமா கவர்ச்சி நடிகையான இவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கமாக வீட்டின் முன்பு நடிகை மாயா தனது காரை நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கார வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். திடீரென வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது.

இதை கேட்டு நடிகை மாயா வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரது காரின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாயா, செய்வது தெரியாமல் தவிர்த்தார். இதுகுறித்து, விரும்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை மாயா புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி பதிவுகளின்படி விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக யாரேனும் கார் கண்ணாடியை உடைத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: