வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் உப்பு லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் உப்பள பகுதி மற்றும் கடினல்வயல், கருப்பம்புலம், கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய பகுதியில் கடந்த 26ம்தேதி முதல் ஒரு வாரமாக இடைவிடாது விட்டு விட்டு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் உப்பளத்தில் கரைகள், பாத்தி, தடுப்பு கரைகள், உப்பு வாரி வைக்கும் இடம் ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது.