சென்னை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு போலீசார்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரச்னை பூதாகரமாக வெடித்ததை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த அடுத்த நாளே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் பென்னிக்ஸ் மூச்சுத் திணறிதான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் கூறியிருந்தார். முதல்வரின் அந்த அறிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தாக்குதலில் இறந்தவர்களை எப்படி முதல்வர் எடப்பாடி இப்படி கூறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.