கொல்கத்தா: கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கொரோனா வைரஸ் பாடத்தை சேர்ப்பதற்கு மேற்கு வங்க அரசு திட்டமிட்டு வருகின்றது. சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் மற்றும் கொரோனா வைரசை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளிப்பாடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.