திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் மலேரியா பிரிவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என 2,500 பேர் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் மூலம் காலை மற்றும் மதிய உணவு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், இந்த களப்பணியாளருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அந்த உணவை சாப்பிடாமல் குப்பையில் வீசினர்.
பின்னர், இதுகுறித்து மண்டல அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அப்போது, அவர் இனிமேல் இதுபோன்று நடக்காது, என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை களப்பணியாளர்களுக்கு காலை உணவாக வழங்கிய கிச்சடியிலும் புழு இருந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.