புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 85.5 சதவீதமும், மொத்த பலியானோர் எண்ணிக்கையில் 87 சதவீதமும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களின் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 5,08,953 ஆக உள்ளது. இதில் 85.5 சதவீதம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு இதுவரை 15,685 பேர் இறந்துள்ளனர். இதிலும், இந்த 8 மாநிலங்களில் மட்டுமே 87 சதவீதம் உள்ளன. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் 18,552 பேர் பாதித்துள்ளனர்.