பெரம்பலுார் அருகே நெகழ்ச்சி கட்டைப்பையில் வைத்து பெண் சிசு வீச்சு: கவ்வி சென்ற நாயை விரட்டி மீட்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்திற்கும் பிரம்மரிஷி மலைக்கும் இடையே புறவழிச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சிறுபாலத்தின் அருகே சாலையோரத்தில் நேற்று காலை ஒரு கட்டைப்பை கிடந்தது. அந்த பையை நாய் ஒன்று கவ்வி இழுத்துக்கொண்டிருந்தது. பைக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.அப்போது அவ்வழியே நடந்து சென்ற எளம்பலூரை சேர்ந்த பஞ்சவர்ணம்(35) என்பவர் ஓடிச்சென்று நாயை விரட்டி விட்டு பையை திறந்து பார்த்தார். அதில், பிறந்து 1 நாளே ஆன பெண் சிசு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சிசுவை தனது வீட்டிற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து அரசு ஆரம்பசுகாதார நிலையம், பெரம்பலுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் வந்து 108ஆம்புலன்சில் பெரம்பலூருக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் தொட்டில் குழந்தை திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: