திருச்சி: கள்ளக்குறிச்சியை சேர்ந்த 70வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 16ம்தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது. அதன்படி, அவரது உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருங்களூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே பொக்லைன் மூலம் 8 அடிக்கு குழி தோண்டப்பட்டிருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 3 பேர் சடலத்தை ஆம்புலன்சில் இருந்து இறக்கி தூக்கி சென்று, குழிக்குள் வீசினர். அதன்பிறகு பொக்லைன் மூலம் மண்ணால் குழியை மூடினர்.இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சடலத்தை தூக்கி சென்ற 3 பேரில், 2 பேர் பாதுகாப்பு கவச உடைகள் எதுவும் அணியவில்லை. முககசவம் மற்றும் கையுறை மட்டும் அணிந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.