சொத்துக்குவிப்பு வழக்கு; மாஜி ஐஜியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சேலம் சரக டிஐஜி ஆக இருந்தவர் ஜெகநாதன்.  இவர் கடந்த 22.1.97 முதல் 27.5.2000 வரை சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த 30.6.2001ல் ஓய்வு பெற்ற  பிறகு மனித உரிமை ஆணையத்தில் ஐஜியாக பணியாற்றினார். இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 33 லட்சத்து 58 ஆயிரத்து 490 மதிப்பிற்கு சொத்து சேர்த்ததாக, இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த 2012ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி வழக்கை விசாரித்த மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், ஜெகநாதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெகநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மனு நிலுவையில் இருந்த காலத்தில் ஜெகநாதன் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி லீலா வழக்கைத் தொடர்ந்து  நடத்தினார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,  ஜெகநாதன் இறந்து விட்டதால் அவருக்கு தண்டனை நிறைவேற்ற முடியாது.  எனவே அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: