பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் கால்கள் உடைந்த நிலையில் நடக்க முடியாமல் கிடந்த காட்டுமாடு வனத்துறையினர் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கருங்கல்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுமாடுகள் குடிநீர் குடிக்க வந்தன. இதில் 6 வயதுடைய காளை காட்டு மாடு ஒன்று உயரமான நிலப்பகுதியில் இருந்து தாவியபோது தவறி பள்ளத்தில் விழுந்தது. இதில் காட்டுமாட்டின் முன்னங்கால் இரண்டும் உடைந்த நிலையில் பலத்த காயத்துடன் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்லும் ஓடை சாலையில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது.