டெல்லி: ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணிப்பது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகளை நீக்குவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ரயில்களில் பயணசீட்டு இல்லாமல் பயணித்தால் இனி அபராதம் மட்டுமே செலுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு துறைகளிலும் உடனடி அபராதம் மட்டும் விதிக்கக்கூடிய வகையிலான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கும் பிரிவுகளை நீக்குவதற்காக அவற்றை அடையாளம் காணும்படி அமைச்சரவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் சிறு குற்றங்களுக்கும் அபராதம், சிறை அல்லது இரண்டும் என்ற தண்டனை நடைமுறையில் உள்ளது.