நெல்லை: டவுனில் பாழடைந்து அபாய நிலையில் உள்ள கல்வி அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டுமென கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள வளாகத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லை கல்வி மாவட்ட அலுவலகம், அரசு தேர்வுகள் துறை அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்படுகிறது. இன்றைய கால கட்டிடத்தை ஒப்பிடுகையில் மிகவும் பலம் வாய்ந்த கட்டிடமாக இருந்தாலும் ஆண்டுகள் பல கடந்து விட்டதால் இந்த கட்டிடம் உறுதி தன்மையை இழந்து வருகிறது. கதவு, ஜன்னல்கள் உடைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனருகே அரசு பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கட்டிடத்தின் அருகே கடந்து செல்வதும் வழக்கம்.