புதுடெல்லி: நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் மூலம், அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது’ என்ற கூற்று நிருபிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், அரசு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை சரியாக கையாளவில்லை; அரசு அதில் தோல்வி அடைந்து விட்டது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நலிவுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு புத்துயிர் ஊட்ட, ஏழை மக்களின் கைகளில் பணம் கிடைப்பதற்கான நிதி ஊக்குவிப்பை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.