புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடந்தால், அது விருந்தினர்கள் பங்கேற்காத திருமணம் போலதான்... என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்னைக்கு இடையிலும் கால்பந்து போட்டிகள், பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முந்திக் கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட்தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதல் போட்டி ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதே பாணியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை, இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பதில் டி20 உலக கோப்பை போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் உட்பட நட்சத்திர வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.