கடலூர்: கடலூர் மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்பது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 16,386 நபர்களுக்கு பிசிஆர் சோதனை செய்து அதில் 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் அடிப்படையில் 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சுமார் 463 பேர் தற்போது சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. சென்னையில் இருந்து பெரும்பாலானோர் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பிரவேசிப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் நபர்கள் கடலூர் எல்லை வரை வந்து, அதன் பின்னர் மாற்று வாகனத்தின் மூலம் மாவட்டத்திற்குள் பிரவேசிக்கின்றனர்.