போபால் : முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அஸ்லாம் பாபா, அதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாடாய் படுத்திக் கொண்டு வருகிறது. கொத்து கொத்தாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்லாம் பாபா என்ற சாமியார் முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்துவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்களும் ஓடி வந்துள்ளனர். இவர்கள் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர்.