புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோய் அச்சுறுத்தலையொட்டி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப தொடங்கினார்கள். அரசின் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், நடைபயணமாக, வாகனங்கள் மூலமாக என லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் வேலையின்றி வருமானம் இன்றி அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மே மற்றும் ஜூன் மாதத்துக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அல்லது எந்த பொது விநியோக திட்டத்தில் இல்லை என்றாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறலாம் என்றும் அரசு குறிப்பிட்டு இருந்தது.