சிறுத்தையை கொடூரமாக கொன்று, அதன் நகங்கள், பற்கள், தோல்களை வெறித்தனத்துடன் பிடுங்கி எரிந்த ஊர் மக்கள் : அசாமில் மனிதமற்ற செயல்

குவஹாத்தி : சிறுத்தையை கொடூரமாக கொன்று, அதன் நகங்கள், பற்கள், தோல்கள் என அனைத்தையும் வெறித்தனத்துடன் ஊர்மக்கள் பிடுங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த சிறுத்தையை தோளில் போட்டுக் கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று அந்த ஊர் மக்கள் கொண்டாடியும் உள்ளனர்.சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி பெண் யானை ஈவு இரக்கமே இல்லாமல் அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. இந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பசு மாட்டின் வாயில் வெடி வைத்து ஒரு கொடூரன் செய்த செயல் அதிர வைத்தது.

இந்நிலையில் மேற்கண்ட சோக சம்பவங்கள் போதாது என்று குவஹாத்தியில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம் குவஹாத்தி நகரில் கோர்ச்சூக்கின் கட்டாபரி பகுதியில், அடிக்கடி காட்டு விலங்குகள் புகுவது வழக்கம். இதனால் அந்த ஊர் மக்கள் விலங்குகளை வலை விரித்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த ஊருக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி விட்டது. இதனை காண அந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.  இந்த நிலையில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட சிறுத்தை வலையிலிருந்து வெளியேறி தப்ப முயன்றது. அது வெளியே வந்த வேகத்தில் 7 வயது சிறுவனை கடித்துப் பிராண்டி விட்டது.

இதைப் பார்த்து கோபமடைந்த மக்கள் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சிறுத்தையை தாக்க ஆரம்பித்தனர். மனிதர்கள் நடத்திய இந்த கொலை வெறித் தாக்குதலில் சிறுத்தை பரிதாபமாக செத்துப் போனது. இந்த மக்கள். சிறுத்தையின் கண்கள், பற்கள், தோல்கள் , நகங்களை தனித் தனியாக பிய்த்து எடுத்து விட்டனர். மிகக் கோரமான முடிவை அந்த சிறுத்தை சந்தித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 6 பேரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: