தஞ்சையில் மேற்குவங்க பெண் பலாத்கார வழக்கு போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை வி.ஐ.பி.க்கள், அதிகாரிகள் கலக்கம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி சானூரப்பட்டி பிரிவு அருகே கடந்த 1ம் தேதி மதியம்,  உடலில் காயங்களுடன் ஒரு பெண் கிடந்தார். போலீசார் மீட்டு விசாரித்தனர். அதில், மேற்கு வங்கத்தைச்  சேர்ந்த 27 வயது இளம்பெண் என்பதும், பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வந்ததும், தஞ்சையில் வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், இங்கு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, காரில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக தஞ்சையைச் சேர்ந்த செந்தில்குமார்(49), இவரது மனைவி ராஜம் (49), பிரபாகரன் (63), ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவர் புதுக்கோட்டையை சேர்ந்த பழனிவேல் (53) ஆவார். பாலியல் தொழில் நடந்து வந்த 3 வீடுகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர். பிடிபட்டவர்கள், பாலியல் தொழிலை கடந்த 4 ஆண்டுகளாக ஹைடெக் முறையில் செய்து வந்துள்ளனர். இதுபற்றி கிடைத்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:

செந்தில்குமார்தான், இந்த கும்பலின் தலைவன். வடமாநிலங்களில் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள இளம்பெண்களை குறிவைத்து வீட்டு வேலைக்கு என புரோக்கர்கள் மூலம் அழைத்து வருவார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த பெண்களை நாகரீக உடைகளில் விதவிதமாக போட்டோ எடுப்பார்கள். அதை தங்களது கஸ்டமர்களின் வாட்ஸ்அப்புக்கு அனுப்புவார்கள். பின்னர் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக தனி வெப்சைட் ஒன்றையும் செந்தில்குமார் நடத்தி வந்துள்ளார். மே.வங்க பெண்ணை தனது கஸ்டமர்களான முக்கிய போலீஸ் அதிகாரிகள், விஐபிக்கள், அரசியல்வாதிகள் என பலருக்கும் செந்தில்குமார் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதுபற்றிய அவரது டைரியும் சிக்கியுள்ளது. அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது யார், யார்? என்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், முக்கிய போலீஸ் அதிகாரிகள், விஐபிக்கள், அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: