திருமலை: கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், ஐதராபாத்தில் கொரோனா தாக்கி தனியார் தொலைக்காட்சி நிருபர் பரிதாபமாக இறந்தார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தனியார் தொலைக்காட்சியின் குற்றப்பிரிவு நிருபராக பணிபுரிந்து வந்தவர் மனோஜ் (30). இவர் மதன்னாபேட்டையில் வசித்து வந்தார். காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘நரம்பு கோளாறு சம்பந்தப்பட்ட மஸ்தீனியா கிராவிஸால் என்ற நோயால் ஏற்கனவே இவர் பாதிக்கப்பட்டு இருந்தார். இதில், கொரோனா வைரசும் சேர்ந்து தாக்கியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மனோஜ் இறந்தார்,’’ என்றனர்.