எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடவில்லை; தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை...தமிழக அரசு விளக்கம்...!

சென்னை: தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடபோது, 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து, சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, கொரோனா தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்று பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற கடந்த 3-ம் சென்னை தலைமை செயலகத்தில் சமயதலைவர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், நாளை 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தப்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. நோய் தொற்று குறையாத காரணத்தால் அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: