புதுடெல்லி: ‘கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு நி்ர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க தனியார் மருத்துவமனைகள் தயாரா?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் சச்சின் ஜெயின் வாதாடுகையில், ‘‘கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் திட்ட பயனாளிகளிடம் ரூ.4000 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே, மற்றவர்களிடம் பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது,’’ என்றார்.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆயுஷ்மான் திட்டப் பலன்களை அரசு வழங்க முடியும். அனைத்து சமூகத்தையும் சேர்ப்பது இயலாத காரியம். மேலும், கார்ப்பரேட் மருத்துவமனைகளை அரசு ஆதரிக்கிறது என்பதில் உண்மையில்லை. ’’ என்றார்.