போடி: போடி அருகே பீட்ரூட் விவசாயத்தில் 60வது நாளில் நான்காவது முறை களைஎடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். போடி நகர் ஒன்றிய பகுதியில் கொட்டகுடி மற்றும் பதினெட்டாம் கால்வாய் தண்ணீரை கொண்டு பல்வேறு குளங்களில் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பாசன நீரை பெற்று பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பல்வேறு தரப்பட்ட விவசாயத்தை செய்து வருகின்றனர். அப்படி தென்னை, மா, பலா, வாழை, நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி என பயிர்களை தடையின்றி சாகுபடி செய்து வருகின்றனர். போடி அருகே நாகலாபுரம் திம்மநாயக்கன்பட்டி ராசிங்காபுரம் போன்ற பகுதிகளில் 70 நாட்களில் பலனாக கிடைக்கும் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து குறுகிய காலத்தில் அறுவடை செய்கின்றனர்.