காங்கயம்: காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்த களங்களுக்கு அந்தந்த பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்தும் தேங்காய் வருவிக்கப்பட்டு மட்டை உரித்து உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பின்னர் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணை நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன. காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் எண்ணெயாக மாற்றப்பட்டு எண்ணெய் டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வடமாநிலங்களான குஜராத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.