சமஸ்திபூர்: பீகாரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு தண்ணீருக்காக சண்டையிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பீகாரில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் 1000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3.5 லட்சம் பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பாட்னாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் புல்ஹாரா நகரில் உள்ள பள்ளியானது கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ள 150 பேர் இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முகாமில் தண்ணீருக்காக 100க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.