திருவனந்தபுரம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரைப்போல போலீசாரும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான போலீசாருக்கும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய 2 ஏடிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு நடத்தி சில பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரைகளை நேற்று முதல் அமல்படுத்துமாறு அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், தினமும் வாகன பரிசோதனை நடத்த தேவையில்லை. கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்தால் போதும். அபராதத்தை வங்கிகளில் செலுத்த வலியுறுத்த வேண்டும்.