திருமலை: தெலங்கானாவில் முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.தெலங்கானா மாநில அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது. இதற்காக அரசாணை எண் 64ஐ மாநில அரசு வெளியிட்டுள்ளது. பேரிடர் பேரழிவு மேலாண்மை சட்டம் 2005 படி இந்த உத்தரவை அளித்துள்ளது. அதன்படி, தெலங்கானாவில் இருந்து சர்வதேச பயணங்களை ரத்து செய்தல், பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கூலித் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில்களை தவிர மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்ட பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.