சென்னை: பாரத்நெட் திட்டத்திற்கு தடைவிதிக்கும் கடிதம் குறித்து, பொய்யாகவும், திரித்தும் அறிக்கை விடுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்று திமுக துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசின் ரூ.1,851 கோடி ரூபாய் “பாரத் நெட்” திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை மறைத்து இருக்கிறார். “மார்ச் 2021க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்று ஒரு “நொண்டிச் சாக்கு” கூறியிருக்கிறார் அமைச்சர். மத்திய அரசின் கெடு என்பதை விட-இந்த டெண்டரில் ஒளிந்திருப்பது, அமைச்சர் தனது “நாற்காலி”யை விட்டுப் போகும் முன்பு இந்த திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்ற ரகசிய நோக்கம் தானே! அதுதானே உண்மை!