சியோல்: வட கொரியா-தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் ராணுவ நிலைகள் மீது வட கொரியா அத்துமீறி நேற்று காலை தாக்குதல் நடத்தியது. தென் கொரியாவும் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தென் கொரியாவின் முப்படைகளின் தளபதி கூறியதாவது: தென் கொரியாவில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது வட கொரியா திடீரென நேற்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டை தவிர்ப்பதற்காக இது குறித்து தெரிவிக்க வட கொரிய ராணுவத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. அதன் பின்னரே, பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியா இரண்டு சுற்று துப்பாக்கிச்சூடு நடத்தியது.