ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ₹5க்கு தானியங்கி இயந்திரத்தில் இருந்து முகக்கவசம் பெறும் வசதியை கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார். உலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். வெளியே செல்லும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் முகக்கவசங்கள் தரத்திற்கு ஏற்ப ₹10 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிலர் குறைந்த விலைக்கு முகக்கவசங்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக ₹5 நாணயம் போட்டு முகக்கவசம் வாங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ₹5 நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தி, முகக்கவசத்தை பெற்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், அலுவலக மேலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.