சென்னை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை அரசு வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி ஆறில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பேர் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 20 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரில் 1596 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.இந்திய அரசின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஒருசிலருக்கு பாதிப்புகள் இருந்தால் மற்றொருவருக்கு ஏற்பட்டு அதனால் மற்ற குடும்பத்தாரும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.