கொரோனா வைரஸ் பீதி: குமாரபுரம் - வடக்கன்குளம் சாலையை அடைத்த இளைஞர்கள்

ஆரல்வாய்மொழி: கொரோனா வைரஸ் பீதியால் குமாரபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையினை இளைஞர்கள் அடைத்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை வருகிற 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதியில் கொரோனா தாக்குதல் உள்ளதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால்  நேற்று காலையில் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் பகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம், காவல்கிணறு பகுதியின் அருகே உள்ளதால் அப்பகுதி பொது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணத்தால் நேற்று காலையில் இப்பகுதி இளைஞர்கள் இப்பகுதியில் இருந்து வடக்கன்குளம் பகுதிக்கு செல்லும் சாலையை கம்பு மற்றும் முள் கொண்டு அடைத்தனர். பின்னர் வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் எவரும் வர வேண்டாம் எனவும் எழுதி வைத்தனர். இதனால் அந்த பகுதி வழியாக அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர்.

Related Stories: