நெல்லை: கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நீடிப்பதால் நெல்லையில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், உணவுக்காகவும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நெல்லை மாநகர பகுதியில் அன்றாட தினக்கூலியாக நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பல தொழிலாளர்கள் தினமும் காலையில் வருகின்றனர். இங்கு அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான இடங்களுக்கு வேலைக்கு பலர் அழைத்துச் செல்கின்றனர்.குறிப்பாக பாளை. மார்க்கெட் பகுதியில் தினமும் காலை 8 மணிக்கு 50 முதல் 100 பேருக்கு குறையாத தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பார்கள்.
இவர்களைத் தேடி வரும் ஒப்பந்தக்காரர்கள் வெள்ளை அடிப்பது, வீடு பராமரிப்பது, கட்டிட பணி கூலித் தொழிலாளர் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். மாலையில் பணி முடிந்து அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி விடுவார்கள். பாளை மார்க்கெட் பகுதிக்கு மட்டும் தினமும் கோவில்பட்டி, வீரவநல்லூர், அம்பை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் தினமும் வந்து தினக்கூலி செய்து அன்றாடம் கிடைக்கும் பணத்துடன் வீடு திரும்பி வந்தனர்.