முகாம்களில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கும் உத்தராகண்ட் அரசு ஆசிரியர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!!

டெஹ்ராடூன் : ஊர்களுக்குச் செல்லவிடாமல் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் எழுதப் படிக்கக் கல்வியையும் வழங்கி வருகிறது உத்தராகண்ட் மாநில அரசு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முற்பட்டபோது, அரசால் தடுக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களிலேயே முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது தன்காபூர் பகுதி. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்குள்ள தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை தொழிலாளர்கள் உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என நினைத்த அப்பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தாமாக முன்வந்து அவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து வருகின்றனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி மொழியை நன்றாக எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர். அடிப்படைத் தொழிலாளர்களுக்கு அடிப்படையான படிப்பறிவைக் கொடுக்கும் இந்த பயனுள்ள முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: