திரிபோலி: லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவ தளபதி கலீபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இருதரப்பும் மோதலை நிறுத்திவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது.