சமூக சேவை செய்வதாக உறுதிமொழி ஏற்றுள்ளேன்: கொரோனாவை தடுக்க செவிலியராக மாறிய நடிகை ஷிகா மல்கோத்ரா

டெல்லி: இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். பலரும் உடற்பயிற்சி தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். இதுபோக பல நடிகர்கள், நடிககைகள்  நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் செவிலியராக மாறியுள்ளார்.

ஷாரூக் கானின் ஃபேன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இவர் டெல்லி மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் 2014-ம் ஆண்டு நர்சிங் டிகிரி பெற்றுள்ளார். தற்போது தன்னார்வத்துடன் தன் பணியைத் தொடங்கியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், கல்லூரியில் படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, சமூகத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டேன். இதுதான் அதற்கான சரியான தருணம் என நினைக்கிறேன். மருத்துவமனையில் எத்தனை மணிநேரம் அல்லது இரவுகளை செலவிட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த முயற்சியை மேற்கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போராட செவிலியராக களம் இறங்கியுள்ள நடிகை ஷிகா மல்கோத்ராவுக்கு பலரும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனி மனிதர்களின் உழைப்பும், சேவை மனப்பான்மையும் கொரோனாவை இந்தியாவை விட்டு நிச்சயம் விரட்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: