டெல்லி : கொரோனா பரவலை தடுக்கும் மற்றொரு முயற்சியாக நாடு முழுவதும் விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறைகளை காலியாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 415 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்றால் 7 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.