குலசேகரம்: புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக புகாரின்படி நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்ற போலீசார், நாளை ஆஜராவதாக எழுதி வாங்கி சென்றனர். அரசியல் விமர்சகரும், மேடை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி தவளகுப்பம் பிரசார கூட்டத்தில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில உள்துறை செயலாளர் சுந்தரேசன் புகாரின்படி தவளகுப்பம் போலீசார் 21ம் தேதி (நாளை) நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பினர்.