ஆவடி: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயல், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், எஸ்.ஆர்.எம்.சி., திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு, நசரத்பேட்டை, குன்றத்தூர் ஆகிய 15 காவல் நிலையங்கள் உள்ளன. புறநகராக இருந்த போது, மேற்கண்ட காவல் நிலைய பகுதிகளில் எந்த இடத்தில் விபத்து நடந்தாலும், அந்தந்த காவல் நிலைய போலீசார்தான் விசாரணை நடத்தி வந்தனர். விபத்து நடந்தால் போலீசார் உடனடியாக வந்து விடுவார்கள். இது அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்தது. தற்போது மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைந்த பிறகு, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் எங்கு விபத்து நடந்தாலும், பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மட்டுமே விசாரணைக்கு வரவேண்டும்.அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சி.டி.எச். சாலை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, திருநின்றவூர்- பெரியபாளையம் சாலை, பூந்தமல்லி-மவுண்ட் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில்தான் அதிகளவு சாலை விபத்து நடக்கின்றன.