தாம்பரம்: சேலையூர் அருகே காரில் கடத்திய 2 டன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள காமராஜபுரம் மசூதி காலனி அருகே நேற்று முன்தினம் இரவு சேலையூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் இடையூராக நின்று கொண்டிருந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதில் செம்மரகட்டைகள் இருந்தது தெரியவந்தது. காரை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் ஆணையர் சகாதேவன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கார் நின்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்து சாலையில் விட்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.