குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு

மதுரை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மகபூப்பாளையத்தில் 16வது நாளாக நேற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பினர், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை நேற்று முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனை தடுக்க அவரது வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ,  மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கிளம்பி சென்றார்.

அவர் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மஜீத் உள்ளிட்ட 10 பேர் கோஷங்களை எழுப்பியபடி, மதுரை, செல்லூர் மெயின் ரோட்டில் இருந்து அமைச்சரின் வீட்டை நோக்கி வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இச்சம்பவத்தால் மதுரையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: