அங்காரா: சிரியாவில் அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இந்நிலையில், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீது சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷியா உதவி செய்து வருகின்றது. இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்–்ச்சி குழுக்களுக்கு துருக்கி ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தங்கள் ராணுவத்தையும் அது களமிறக்கி உள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ரஷ்ய படைகளுடன் இணைந்து சிரியா விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர். மேலும். பல வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு துருக்கி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.