புதுடெல்லி: ‘மத்திய அமைச்சர், பா.ஜ நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை இடமாற்றம் செய்யப்பட்டது மூலம், பாஜ.வின் பழிவாங்கும் அரசியல் அம்பலமாகி உள்ளது,’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்த தைரியமான நீதிபதி லோயா இடமாற்றம் செய்யப்படவில்லை. தன்னுடன் பணியாற்றும் நண்பரின் மகள் திருமணத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு சென்றபோது மாரடைப்பால் பலியானார்,’ என குறிப்பிட்டுள்ளார். இவருடைய மர்மச்சாவின் பின்னணியில் பாஜ இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், ராகுல் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.