சென்னை: 2018ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்விலும் முறைகேடு அரங்கேற்றப்பட்டு கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 4, குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய இடைத்தரகராக ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோரை குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ வழக்குகளில் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்துள்ளனர்.