நாகர்கோவில்: களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு 9.30 மணியளவில் களியக்காவிளை அருகேயுள்ள சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதுதொடர்பாக தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர்.வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதிகள் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.