ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற மீனவருக்கு வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதாக சக மீனவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் அச்சம் காரணமாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் படகுகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.