உ.பி மாநிலத்தில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்க மோசடி செய்ய தூண்டிய பள்ளி முதல்வர் கைது

லக்னோ: பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் 100 ரூபாயை இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே சர்ச்சையாக பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 56 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

லக்னோவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் பிரவீன் மால் தேர்வுகளில் எவ்வாறு ஏமாற்றுவது மற்றும் மாநில அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை  எவ்வாறு மீறுவது என்பது குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். இது குறித்து அவர் பேசியதாவது: தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொள்ளலாம் மற்றும் விடைத்தாள்களை பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் அரசு பள்ளி தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் எனது நண்பர்கள் என்பதால் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

நீங்கள் எந்த பதில்களையும் விட வேண்டாம் என்றும் விடைத்தாளில் 100 ரூபாயை மட்டும் இணைத்து விடுங்கள் ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக உங்களுக்கு மதிப்பெண்கள் கொடுப்பார்கள். ஒரு கேள்விக்கு நீங்கள் தவறாக பதிலளித்தாலும், அது நான்கு மதிப்பெண்களுக்கு, பதில்  உங்களுக்கு மூன்று மதிப்பெண்களைக் கொடுக்கும் என்று சர்ச்சையாக பேசினார். இதை  மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இது வைரலானதால்  பள்ளி முதல்வர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories: