அகமதாபாத்: ‘மாத விலக்கான பெண்கள் கணவருக்கு சமைத்து கொடுத்தால் அடுத்த பிறவியில் கண்டிப்பாக நாயாகத்தான் பிறப்பார்கள்,’ என மத தலைவர் ஒருவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். குஜராத் மாநிலம், கட்ச்சில் உள்ள புஜ் நகரத்தில் சுவாமி நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் அறக்கட்டளைக்கு சொந்தமாக கல்லூரி ஒன்று உள்ளது. இதில், படிக்கும் மாணவிகளுக்கு விடுதி இயங்கி வருகிறது. மாதவிலக்கான மாணவிகள், இதர மாணவிகளுடன் சேர்ந்து உணவருந்த க்கூடாது என்ற விதிமுறை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த விதிமுறையை மீறி சில மாணவிகள் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்டறிவதற்காக அங்கு தங்கியுள்ள 60 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து பெண் ஊழியர் சோதனை நடத்தியுள்ளார். கடந்த 11ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில், விடுதி ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர், மற்றும் உதவியாளரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.