சென்னை: வேளச்சேரி வீராங்கல் கால்வாயை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள வீராங்கல் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ராமகிருஷ்ணன் மற்றும் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன் விசாரனைக்கு வந்தது.