சென்னை: பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இதுவரை இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் அதேபோன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பாடங்களை படித்திருந்தால் தான் பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பான டெல்லியில் இருக்கக்கூடிய ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு என்ற அமைப்பு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளை வெளியிடுகிறது. அந்த விதிமுறைகளில் தான் இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 12ம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வேதியியல் பாடம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நாடு முழுவதும் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கு தற்போது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு வருகிறது.